காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்டுள்ள நேஷனல் ஹெரால்ட் முறைகேடு வழக்கு, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், முக்கிய மனுதாரரான சுப்பிரமணியசாமி தொடர்ந்துள்ள கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றது.
அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகார் விவரங்களை, சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சுப்ரமணியசாமிக்கு வழங்க நீதிபதி விஷால் கோக்னே உத்தரவு பிறப்பித்தார். இது வழக்கின் தொடர்ச்சிக்கே முக்கிய புள்ளியாக பார்க்கப்படுகிறது.
வழக்கின் பின்னணியில், சோனியா மற்றும் ராகுல் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்க்வி ஆஜராகி, “இந்த வழக்கில் 5,000 பக்க அறிக்கைகள் உள்ளன, எனவே முழுமையாக படிக்க நேரம் தேவைப்படுகிறது” எனக் கூறி, விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கக் கோரினார்.
மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகி, “வாதங்களை இன்றே தொடங்க தயாராக இருக்கிறோம். 2-3 மணி நேரமே போதும்” எனக் கூறி, விசாரணையை தாமதிக்க முடியாது என்றார்.
இந்நிலையில், நீதிபதி, வழக்கின் முதல் கட்ட வாதங்களை இன்றே தொடங்கலாம் எனத் தீர்மானித்து, அமலாக்கத்துறைக்கு உரிய அனுமதியையும் வழங்கினார்.
இந்த வழக்கு, இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான விசாரணையாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் இது முன்னாள் பிரதமர் குடும்பத்தின் எதிர்காலத்திற்கும், காங்கிரஸ் கட்சியின் சட்ட நிலைக்கும் நேரடி தாக்கம் ஏற்படுத்தக்கூடியது.