உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் படம் கோலிவுட் திரையுலகில் கதைகளத்திலும், வசூலிலும் புதிய சாதனையை படைத்தது என்றே கூறலாம். அந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசன் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைப்பெற்று வருகிறது என தகவல்களும் வெளியாகியுள்ளன. தற்போது வரை படப்பிடிப்பு, தயாரிப்பு, பிக்பாஸ் என பிஸியாக உள்ளார் கமல்ஹாசன்.
இந்த நிலையில் தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களாக இருக்கும் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் அவர்களும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் 36 வருடத்திற்கு முன் நாயகன் படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன் பிறகு இப்படத்தில் இணைந்துள்ளனர்.
கடைசியாக இயக்குநர் மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுப்படத்தினை இயக்கினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதன் பிறகு ‘KH 234’ இப்படத்தினை இயக்க உள்ளார். சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜை முடிந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகை குஷ்புவின் மகள் இணைந்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. குஷ்பு மற்றும் இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி ஆகியோரின் மகள் அனந்திதா அவர்கள் KH 234 படத்தில் இயக்குநர் மணிரத்னத்திற்கு துணை இயக்குநர் ஆக பணியாற்ற இணைந்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.