தமிழக சினிமாவின் மூத்த நடிகர் ஜூனியர் பாலையா இன்று காலை காலமானார், அவருக்கு வயது 70. இவர் 1975ஆம் ஆண்டு வெளியான மேல்நாட்டு மருமகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
மறைந்த பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மூன்றாவது மகன் தான் ரகு பாலையா, இவர் தந்தையை போலவே உருவ ஒற்றுமை கொண்டதனால் இவரை திரைத்துறையினர் ஜூனியர் பாலையா என அழத்தனர். இவர் அன்பே ஓடி வா, கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை, தனி ஒருவன், என்னங்க சார் உங்க சட்டம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமுத்திரக்கனி நடிப்பில், அன்பழகன் இயக்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே உள்ள உறவை பற்றி கூறும் கதையாக வெளியான சாட்டை திரைப்படத்தில் தலைமை ஆசிரியராக தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் Junior Balaiah.
என்னங்க சார் உங்க சட்டம் என்ற படத்திற்கு பிறகு இவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இவருக்கு உடல்நலம் குறைபாடு இருந்த நிலையில் இன்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டதால், இல்லத்திலேயே இவரது உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை இறுதி சடங்குகள் நடைபெரும் என தகவல் வெளியாகியுள்ளது.