ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் மிகவும் பழமையான கோவில் ஆகும். இக்கோவிலில் பெரியாழ்வார்கள் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் எனவும் கூறப்படுகிறது. இந்த கோவிலானது 108 வகையான திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மதத்தின் வைணவ கோவில்களில் ஒன்றாகும்.
இப்பகுதியானது மல்லி என்னும் அரசியினுடைய ஆட்சியில் வில்லி என்னும் காட்டை சீர்படுத்தி கோயிலை எழுப்பி அதனோடு ஒரு அழகிய நகரையும் அமைத்தால் என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் இந்த இடத்திற்கு வில்லிபுத்தூர் என்று பெயர் பெற்றதாம். இந்த கோவிலில் தான் தமிழ்நாடு அரசு முத்திரை சின்னமாக உள்ள ராஜகோபுரம் அமைந்துள்ளது.
இக்கோயில் சுற்றுலா தளமாகவும் உள்ளது. எனவே இங்கு அதிக அளவில் மக்கள் ஆண்டாளை வழிபட வருவதுண்டு. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான கோவில்களில் இதுவும் ஒன்று. இந்நிலையில் இன்று (டிசம்பர் 6) பாபர் மசூதி இடிப்பு தினம் எனவே தமிழக முழுவதும் உள்ள வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்பட்டு வருகிறது.
பாபர் மசூதி இடிப்பு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 6-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பாபர் மசூதி ஒன்று இருந்தது. இந்த மசூதியானது 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தேதியில் பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று பாபர் மசூதி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. எனவே நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாகக் கோவையில் 2000 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் மாநகர் பகுதியில் 1,200 பேர் புறநகர் பகுதியில் 800 பேர் என மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க அதிக கூட்டம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், வழிபாட்டுத் தலங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிகம். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களில் இருந்தும் ஆதிக அளவில் பக்தர்கள் வருகைதருவர், அப்போது ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசித்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதனால் பக்தர்களின் வருகை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் பாதுகாப்பினை அதிகபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழக அரசின் முத்திரையில் உள்ள ராஜகோபுரம் அமைந்துள்ள ஸ்ரீ ஆண்டாள் கோவில் மற்றும் தங்க விமானம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்கள் மற்றும் கோவில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி, கோவிலில் நடைபெறும் அனைத்து செயல்களும் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும். பக்தர்கள் துன்புறுத்தல்கள் எதுவுமின்றி தீவிர சோதனைக்கு பின் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர்.