தமிழக அரசு ஆன்மீக சுற்றுலாக்களை ஊக்கப்படுத்தும் விதமாக இலவச ஆன்மிக பயணத்திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதலில் 300 பேருக்கு இலவச ஆன்மிக சுற்றுலா செல்லும் வாய்ப்பினை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த இலவச சுற்றுலாவிற்கு விண்ணப்பிக்கும் முறை, தமிழக அரசின் அறநிலையத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் இலவச ஆன்மீக சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாவானது ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலில் தொடங்கி காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் முடிவடைகிறது. இந்த வாய்ப்பு அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளது. இந்த சுற்றுலாவில் கலந்துக்கொள்ள ஒரு மண்டலத்திற்கு 15 நபர்கள் வீதம் 20 மண்டலங்களில் இருந்து 300 நபர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
இந்த ஆன்மீக சுற்றுலாவிற்கு விண்ணப்பிக்க வேண்டுமெனில் அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆண்டிற்க்கான இலவச ஆன்மீக சுற்றுலாவிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் மாதம் 20-ம் தேதி என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் பிறகு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்மீகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த பயணத்தில் அனைத்து வயதினரும் கலந்துக்கொள்ள முடியாது. இந்த ஆன்மீக சுற்றுலாவில் 60 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே கலந்துக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி இன்னும் சில நிபந்தனைகளும் உள்ளன. அவை, சுற்றுலா செல்பவர்கள் இந்து சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும், இறை நம்பிக்கை உடையவராகவும், தமிழகத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் மற்றும் ஆண்டு வருமானமானது 2 லட்ச ரூபாய்க்கு அதிகமாக இருக்கக் கூடாது. எனவே வருமான சான்று சமர்பிக்க வேண்டும். இந்த இலவச ஆன்மீகப் பயணம் 10 நாட்களுக்கு நடைபெறுவதால் அரசு அனுமதி பெற்ற மருத்துவரிடம் பெற்ற உடல் தகுதி சான்று கண்டிப்பாக தேவைப்படும். இது குறித்த விவரங்களுக்கு www.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்பு கொள்ளுமாறு தமிழக அரசு அறநிலையதுறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.