ரவி பிஷ்னாய் இந்திய கிரிகெட் வீரர் ஆவார். இவர் அண்மையில் நடைபெற்ற இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடினார். இந்த தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்த டி20 தொடரில் ரவி பிஷ்னாய் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியாவின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார். இந்திய அணிக்கு விக்கெட்டுகள் தேவைப்படும் போது விக்கெட்டுகளை இவர் வீழ்த்தினார்.
குறிப்பாக இந்த தொடர் முழுவதும் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட இந்திய வீரர்கள் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறிய நேரத்தில், பவர் பிளே ஓவர்களில் இவர் அதிக விக்கெட்டை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி நடைபெற்ற ஒவ்வொரு போட்டியிலும் தன் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் ரவி பிஷ்னாய்.
இவர் leg spinner-ஆக இருந்தாலும் அதிகம் ஸ்பின் செய்யாமல் கூக்ளி பந்துகளை வீசியே விக்கெட்டை வீழ்த்தினார். சாஹலை போல் இல்லாமல் இவர் பந்தை நன்றாக காற்றில் பறக்கவிட்டும் கூடுதல் வேகத்தில் வீசுவதால் ரவி பிஷ்னாயின் கூக்ளிகளை கணிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.
இதன் மூலம் ரவி பிஷ்னாய் ஐசிசி டி20 பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் 699 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் ஆஃப்கானிஸ்தான் அணியின் வீரர் ரஷீத் கான் தான் முதலிடத்தில் இருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளி ரவி பிஷ்னாய் முதலிடத்தில் உள்ளார். அதுமட்டுமின்றி 3-வது இடத்தில் ஹசரங்கா மற்றும் 4-வது இடத்தில் அடில் ரஷீத் மற்றும் 5-வது இடத்தில் இலங்கை அணியின் தீக்சனா ஆகியோர் உள்ளனர்.
இதில் ஆச்சர்யப்படவைப்பது இவர்கள் 5 பேருமே ஸ்பின்னர்கள் ஆவார். அதுபோல டாப் 10 வீரர்களில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். இதேபோல் பேட்ஸ்மேன்களுக்கான டி-20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளார் மற்றும் பவுலர்களுக்கான தரவரிசையில் ரவி பிஷ்னாய் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். பும்ராவுக்கு பின் டி-20 தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரர் என்ற சாதனையையும் ரவி பிஷ்னாய் தற்போது படைத்துள்ளார்.