தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு. தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும். ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அடுத்த ஆண்டு மே மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர், அதில் 3 கோடி ஆண்களும், 3 கோடியே 10 லட்சம் பெண்களும், 8,016 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் எனவும், குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் எனவும் கூறினார்.
நவம்பர் 9 ஆம் தேதி அனைத்து வாக்குசாவடியிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டடியலில் உள்ளதா என சரிபார்க்க வேண்டும். நவம்பர் 4, 5 மற்றும் 18, 19 ஆம் தேதி சிறப்பு முகாம்கள் வாக்குசாவடி மையங்களில் நடைப்பெறும் அப்போது பட்டியலில் பெயர் விடுபட்டு இருந்தால், பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் இருந்தால் நேரில் சென்று படிவம் 6 -ஐ சமர்ப்பிப்பதன் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது தேர்தல் கமிஷனின் eci.gov.in இணையதளம் மூலமாகவும் அல்லது Voter Helpline App என்ற செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். 17 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம், 18 வயது பூர்த்தியாகும் காலாண்டில் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். டிசம்பர் 9 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என கூறினார்.