தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தும் நீட் தேர்வு விலக்கு கோரும் கையெழுத்து இயக்கத்திற்காக இன்று நவ 3 (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்லப்பெருந்தகை உள்ளிட்ட முன்னணி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக சென்றனர்.
அதன்பின், காங்கிரஸ் கட்சியில் தலைவர்களை அவர்களது அலுவலகத்தில் சந்தித்து கையெழுத்து பெற்றப்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நீட் விலக்கு நம்முடைய இலக்கு என்பதை அடிப்படையாக கொண்டு கழகத்தின் இளைஞரணி, மருத்துவ அணி, மாணவரணி சேர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் Neet Exemption செய்ய வேண்டும் என கையெழுத்து இயக்கம் தொடங்கினோம்.
சட்டமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால் அதை ஆளுநர் கிடப்பில் போட்டுவிட்டார். தொடர்ந்து வலியுறுத்தி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருந்தோம். கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்திருந்தோம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக அவர் கூறினார்.
நீட் தேர்வினால் கடந்த 6 ஆண்டுகளில் அனிதா முதல் ஜெகதீசன் வரை மொத்தம் 22 உயிர்கள் பறிபோனது. நீட் தேர்வு ரத்து செய்வதற்காகவே இந்த கையெழுத்து இயக்கம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளை பெற்றுள்ளது என்றும் சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞரணி மாநாட்டில் இதனை முதலமைச்சரிடம் ஒப்படைத்து குடியரசு தலைவரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
போஸ்ட் கார்டு மூலம் 8 லட்சம் கையழுத்துகளை பெறப்பட்டதாகவும், banneet.in என்ற ஆன்லைன் தளத்தின் மூலம் 3 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன என்றும் கூறினார். திமுக கட்சியின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை சந்தித்து இன்று கையெழுத்து பெறப்பட்டது போன்று மதசார்பற்ற கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளையும் சந்தித்து கையெழுத்து பெற இருப்பதாகவும் அவர் கூறினார்.
இது திமுகவின் தனிப்பட்ட பிரச்சனை இல்லையென்றும், அது ஒட்டு மொத்த மாணவர்களுக்கான கல்வி உரிமை, மருத்துவ உரிமை என்று கூறிய அவர் இதற்காக மற்ற கட்சி தலைவர்களையும் சந்தித்து கையெழுத்து பெற உள்ளதாக கூறினார்.