இன்றைய காலகட்டத்தில் வீட்டு வாடகை முதல் EB Bill, Gas Bill என அனைத்து வகையான கட்டணத்தையும் நாம் ஆன்லைன் மூலமே அதிக அளவில் செலுத்துகிறோம். ஒருபக்கம் மக்கள் பலரும் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வரும் நிலையில், மறுபக்கம் மோசடி சம்பவங்களும் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. நாம் ஆன்லைன் பேமன்ட் செய்ய அதிக அளவில் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று UPI ஆகும். எனவே ஆன்லைன் மோசடிகளை தடுக்க யுபிஐ பணப்பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு புதிய கட்டுப்பாடு ஒன்றை விதிக்க முடிவு செய்துள்ளது.
இந்த வகையான செயல்முறையானது ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் சில சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது எனினும் இணையப் பாதுகாப்பு மோசடிகளை குறைக்க இதுபோன்ற நடவடிக்கைகளை கொண்டுவந்துள்ளது.
இந்த நடவடிக்கையானது உறுதி செய்யப்பட்டால், உடனடி கட்டணச் சேவை (IMPS), ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் (RTGS) மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண இடைமுகம் (UPI) ஆகியவை போன்ற டிஜிட்டல் பேமெண்ட்டுகளையும் உள்ளடக்கி இருக்கும்.
தற்போது வரை உள்ள நடைமுறையில் புதிய UPI கணக்கை உருவாக்கும் ஒரு பயனர் தனது முதல் 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ரூ.5,000 வரை அனுப்ப முடியும். அதேபோல தேசிய மின்னணு நிதி பரிமாற்றத்தில் (NEFT), பயனாளியின் செயல்பாட்டிற்குப் பிறகு முதல் 24 மணி நேரத்தில் ரூ. 50,000 வரை முழுமையாக அல்லது பகுதிகளாக பிரித்து அனுப்பலாம்.
இந்த கட்டுபாடுகளின் படி யுபிஐ மூலம் ஒரு தனிநபருக்கு முதல் முறை பணம் அனுப்பும்போது அதிகபட்சம் 2000 ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும் மற்றும் அதற்கு மேல் பணம் அனுப்ப வேண்டும் என்றால் நான்கு மணி நேரத்திற்கு பிறகு தான் அனுப்ப முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டுபாடு கடைகளில் பொருட்கள் வாங்கும் போது கிடையாது என்றும் கூறியுள்ளது. மேலும் இந்த நடைமுறை விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.