Homeஆன்மிகம்Kolaru Pathigam Lyrics in Tamil: வாழ்வின் அனைத்து குறைகளையும் தீர்க்கும் கோளறு பதிகம்..!

Kolaru Pathigam Lyrics in Tamil: வாழ்வின் அனைத்து குறைகளையும் தீர்க்கும் கோளறு பதிகம்..!

நம்மில் பலருக்கு வாழ்வில் ஒருமுறையாவது நவகிரக தேசம் ஏற்பட்டு இருக்கும். இதுபோன்ற நவகிரக தோசங்கள் நீங்கவும் ஆயுள் மற்றும் உடல் நலம் ஆகியவற்றை சீராக்கவும் உதவும பதிகம் தான் இந்த கோளறு பதிகம். இந்த கோளறு பதிகத்தை பற்றி சிலருக்கு தெரிந்து இருந்தாலும் பலர் இதை பற்றி தெரிந்து கொள்ளாமல் தான் இருக்கின்றனர். எனவே நாம் இன்று இப்பதிவில் கோளறு பதிகம் (Kolaru Pathigam Meaning In Tamil) என்றால் என்ன அதனை படிப்பதால் ஏற்படும் நம்மைகள் மற்றும் அதன் வரலாறு ஆகியவற்றினை இப்பதிவில் பார்க்கலாம்.

கோளறு பதிகம் (Kolaru Pathigam)

அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் பல வகையான நற்பலன்களையும் பெற வழிவகை செய்யும் பல பாடல்களை நமக்காக அளித்துள்ளனர். இந்த வரிசையில் தான் திருஞான சம்பந்தர் பெருமான் அருளிய தேவார பாடலில் உள்ள ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் திருமுறைகள் வைக்கப்பட்டுள்ளன. இது பன்னிரு சைவ திருமுறைகளில் ஒன்றாகும். மேலும் தேவாரத்தில் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று தான் இந்த கோளறு பதிகம். இதனை திருகோளறு பதிகம் என்றும் அழைப்பர்.

கோளறு பதிகம் உருவான கதை (Kolaru Pathigam History)

மதுரையை ஆண்ட இளவரசி மங்கையர்க்கரசியின் அழைப்பை ஏற்று மதுரைக்கு வரவிருந்தார் திருஞானசம்பந்தர். இதற்காக அவர் திருவாதவூரிலிருந்து புறப்பட்டார். ஆனால் அன்றைய நாள் நல்ல நாளாக இல்லாத காரணத்தால் இன்று பயணிக்க வேண்டாம் என்று திருநாவுக்கரசர் அவர்கள் திருஞானசம்பந்தரின் பயணத்தைத் தடுத்தார். ஆனால் இதனைக் கேட்ட சம்பந்தர், நம்மை போன்ற இறைவனின் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தான் என கூறி பத்து பாடல்களைப் பாடி அருளினார். இவை தான் கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது.

கோளறு பதிகத்தின் பயன்கள் (Kolaru Pathigam Benefits )

  • திருஞானசம்பந்தர் பதிகம் என்னும் பத்து பாடல்களையும் அதோடு அதன் பொருள் சேர்த்து 11 பாடல்களைப் பாடியுள்ளார். வருடம் முழுவதும் நாம் பல கிரக நிலைகளால் நாள் நேரம் சரியில்லை என்று என்னும் போது நாம் இப்பாடல்களை பாடினால் கிரக தோஷங்கள் தீரும் என்பது ஒரு நம்பிக்கை. இப்பாடலை பாடுவது மட்டுமின்றி பிறர் இப்பாடலை பாட கேட்டால் கூட தீராத வினைகளும் தீரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
  • திருஞானசம்பந்தர் அருளிய இந்த கோளறு பதிகத்தை அனுதினமும் படிப்பதால் கர்ம வினையினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடியும் என்றும் நம்பப்படுகிறது. மேலும் இந்த பதிகத்தை புண்ணியம் நிறைந்த புரட்டாசி பிரதோஷ நன்னாளில் இந்த பதிகத்தை படிப்பது மிக சரியானதாக இருக்கும்.
Thirugnanasambandar

கோளறு பதிகத்தில் உள்ள பாடல்கள் (Kolaru Pathigam Lyrics in Tamil)

கோளறு பதிகத்தில் மொத்தம் பத்து பாடல்கள் உள்ளன. அதன் பொருளோடு சேர்த்து 11 ஆகும். இப்பதிகத்தில் உள்ள பாடல் வரிகள் (Kolaru Pathigam in Tamil) மற்றும் கோளறு பதிகம் பாடல் வரிகளின் விளக்கம் ஆகியவற்றினை ஒன்றின் பின் ஒன்றாக பார்க்கலாம்.

கோளறு பதிகம் பாடல் 1

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

விளக்கம்

சிவபெருமானை, இப்படலில் மூங்கிலைப்போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன்னுடைய உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விஷத்தை அனைத்து உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். மேலும் இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு உள்ளவன் என்றும் என் உள்ளம் முழுவதும் நீ நிறைந்து காணப்படுவதால் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் ராகு- கேது ஆகிய கோள்களும் என்னை போன்ற சிவனடியாருக்கு என்றும் நல்லதையே செய்யும். இந்த பாடல் கூறும் கருத்து இப்பதிகத்தை படிப்பதால் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் நன்மையே புரியும் என்பது தான்.

கோளறு பதிகம் பாடல் 2

என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

விளக்கம்

இந்த இரண்டாம் பாடலில் திருமாலின் அவதாரங்களான வாமன, பன்றி, கூர்மம் ஆகியவற்றின் ஆணவத்தை அடக்கி அணிந்து நிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றை அணிந்து மேலும் ஊமத்தை மலர்களால் ஆன மாலையை அனிந்து உமையவளுடன் எருதின் மேல் ஏறி விண்மீன்களாய் வலம் போது முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லா நட்சத்திரகளும் சிவனடியார்களுக்கு என்றும் நல்லதையே செய்யும் என்பது தான் இப்பாடலில் பொருள்.

கோளறு பதிகம் பாடல் 3

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

விளக்கம்

இந்த மூன்றாம் பாடலில் பவளம் போன்று சிவந்த திருமேனியில் ஒளிபொருந்திய வெண்ணீற்றை அணிந்துள்ளதாலும், மேலும் சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான் நம் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். எனவே கலைமகள், வெற்றித் தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் அனைவரும் அடியவர்களுக்கு நம்மையையே செய்வர்.

கோளறு பதிகம் பாடல் 4

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

விளக்கம்

பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கை நதியையும் கொன்றை மாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். எனவே காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நமக்கு நல்லதையே செய்யும்.

கோளறு பதிகம் பாடல் 5

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

விளக்கம்

ஆலகால விஷத்தை தன் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின் மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து உள்ள அவர் என் உள்ளத்தில் தங்கியுள்ளார். எனவே கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்ச பூதங்கள் முதலானவையெல்லாம் நம்மைக் கண்டு நமக்கு அஞ்சி நல்லதையே செய்யும்.

கோளறு பதிகம் பாடல் 6

வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

விளக்கம்

ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும் வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். இதனால் கொல்லும் வலிய புலி, கொலையானை, பன்றி, கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியவை கூட நமக்கு நல்லனவே செய்யும்.

கோளறு பதிகம் பாடல் 7

செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

விளக்கம்

செம்பு போன்ற இளந்தனங்களை உடைய திருமகளை தன்னுடைய திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின் மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய் என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். எனவே காய்ச்சல், குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையாது என்பது தான் இப்பாடலின் பொருள் ஆகும்.

இதையும் படியுங்கள்: Pournami Date 2024: இந்த ஆண்டிற்கான பௌர்ணமி நாட்கள்..!

கோளறு பதிகம் பாடல் 8

வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

விளக்கம்

கோளறு பதிகம் பாடல் 8 பொருள் அன்று மன்மதன் அழியும்படி தன் நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான் தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் மனதில் தங்கியுள்ளான். எனவே ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தாது அதுமட்டுமின்றி ஆழமான கடல் கூட நமக்கு நல்லனவே செய்யும்.

Kolaru Pathigam

கோளறு பதிகம் பாடல் 9

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

விளக்கம்

பல்வேறு கோலங்கள் உடைய பரம்பொருளானவனும் எருதின் மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்தில் நிலைத்துள்ளார். அதனால், தாமரைமலர் மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்யும்.

கோளறு பதிகம் பாடல் 10

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

விளக்கம்

தன் கூந்தலில் மலர்க்கொத்துகளை அணிந்த உமையம்மையாரோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட சிவபெருமான், தன் முடி மேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். எனவே அவைகளும் நமக்கு நல்லனவே செய்யும்.

கோளறு பதிகம் பாடல் 11

தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!!

விளக்கம்

இந்த கோளறு பதிகத்தின் 11 பாடலில் தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும் விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் வழிபட்ட காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.

இப்பதிவில் நாம் கோளறு பதிகம் வரிகள் மற்றும் அதன் விளக்கம் பற்றி அதனை நாம் தினந்தேறும் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் இப்பதிவில் பார்த்துள்ளோம். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இதையும் படியுங்கள்: Mahalaya Amavasya 2024: சிறப்பு வாய்ந்த மஹாளய அமாவாசையின் முக்கியத்துவம் என்ன?

கோளறு பதிகம் – FAQ

1. கோளறு பதிகத்தை இயற்றியவர் யார்?

கோளறு பதிகத்தை இயற்றியவர் திருஞானசம்பந்தர் ஆவார்.

2. கோளறு பதிகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது?

கோளறு பதிகத்தில் மொத்தம் 11 பாடல்கள் உள்ளது.

3. கோளறு பதிகத்தை படிப்பதால் ஏற்படும் நம்மை என்ன?

கோளறு பதிகத்தை படிப்பதால் நவகிரக தோஷங்கள் நம்மை விட்டு நீங்கும்.

4. கோளறு பதிகத்தை தினமும் படிக்கலாமா?

கோளறு பதிகத்தை தினமும் படிக்கலாம்.

5. கோளறு பதிகத்தை எந்த நாளில் படித்தால் கூடுதல் நம்மை கிடைக்கும்?

புரட்டாசி பிரதோஷ நன்னாளில் இந்த பதிகத்தை படிப்பது மிகவும் சரியானதாக இருக்கும்

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular