உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளம் தான் X என பெயர் மாற்றப்பட்டுள்ள ட்விட்டர். இந்த ட்விட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியது முதலே அதிரடியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக தற்போது ஒரு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டரை வாங்கியது முதல் பெயர் மாற்றம், ஆட்குறைப்பு, மாதச் சந்தா என புதிய புதிய மாற்றங்களை தினம் தினம் அறிவிப்புகள் வெளியாகி கொண்டே இருந்தன. இந்த நிலையில் தற்போது இந்த எக்ஸ் தளத்தில் இருந்து 2 லட்சம் இந்தியர்களின் (Indians X Account Blocked) கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2,12627 இந்தியர்களின் கணக்குகள் எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து எக்ஸ் தளம் அதன் மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட கணக்குகளில் பெரும்பாலானவை குழந்தைகளின் பாலியல் சுரண்டல் மற்றும் பயங்கரவாதத்துக்கு தொடர்புடையதாக இருந்துள்ளன.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக இந்தியாவில் உள்ள 1,235 எக்ஸ் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான நடவடிக்கை எடுப்பதற்காக எக்ஸ் தளம் இந்த முடிவு செய்துள்ளது. எக்ஸ் தளத்தில் இருந்து திடீர் நீக்கம் குறித்து பயனர்களுக்கு அறிக்கை ஒன்றை எக்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி எக்ஸ் தளத்தில் குழந்தைகள் ஆபாச வீடியோ, பயங்கரவாதத்திற்கு ஊக்குவிக்கும் எக்ஸ் கணக்குகள் மீதான நடவடிக்கை எடுக்கும் வழக்கம் நீண்ட காலமாக எக்ஸ் தளத்தில் உள்ளது. இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்பாக இந்திய பயனர்களிடம் இருந்து 5,158 புகார்கள் பெறப்பட்டுள்ளது.
அந்த புகார்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி நீக்கம் செய்யப்பட்ட கணக்குகளில் இருந்து 86 பேர் எதிராக முறையிட்டு விளக்கம் அறித்துள்ளனர். அவர்களில் 7 பேர் விளக்கம் ஏற்கப்பட்டு நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.